Publish Date: Thu, 13 Jan 2022 (11:21 IST)
Updated Date: Thu, 13 Jan 2022 (11:24 IST)
கார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமானை மனதில் எண்ணி விரதம் மேற்கொண்டு கடைபிடிக்கப்படும் வழிபாட்டு முறையாகும்.
அந்தவகையில் கார்த்திகை விரதம் மேற்கொள்ளும் முறை பற்றியும், இந்த விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் பார்க்கலாம்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து கார்த்திகேயன் என்று பெயர் பெற்ற முருகப்பெருமான் அருளை பெறுவதற்கு மேற்கொள்ளும் ஒரு விரதமுறை தான் இந்த கார்த்திகை விரதம். முருகனை எண்ணி நோற்கக்கூடிய முக்கிய விரதங்களுள் கார்த்திகை விரதமும் ஒன்று.
கார்த்திகை விரதம் மேற்கொள்ள இருப்பவர்கள் அதிகாலையில் நீராடி முருகனை வழிபட வேண்டும். பிறகு பகலில் உறங்காமலும், உணவு உண்ணாமலும் முருகனைப் பற்றி சிந்தனை செய்து தீயச்செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
மேலும் முருகனின் மந்திரங்கள், கந்த புராணம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை படிப்பதும், பாராயணம் செய்வதும் சிறந்தது. விரதம் இருக்க முடியாதவர்கள் பழம் மற்றும் பால் ஆகியவற்றை உண்ணலாம்.