மதுரை மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் அறங்காவலர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. 8ஆம் நாளான நேற்று மாலை மதுரையை அரசாளும் மீனாட்சிக்கு மகுடம் சூட்டும் பட்டாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் விக்னேஸ்வரர் பூஜை, புண்ணியாக வாஜ னம் பூஜை, பஞ்சகவ்ய பூஜை, கும்பபூஜை ஆகியவை நடத்தப்பட்டது.
அதன் பிறகு வைர கிரீடத்திற்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. கோவிலிலுள்ள அனுக்ஞை விநாயகரிடமிருந்து செங்கோலும் கிரீடமும் பெறப்பட்டு, இரவு 7.22 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சூட்டப்பட்டது. பின்னர் மீனாட்சி அம்மனுக்கு பச்சை பட்டாலான பரிவட்டமும், வேப்பம்பூ மாலையும் சாத்தப்பட்டது.
9ஆம் நாளான இன்று மாலை 6 மணிக்கு வடக்கு மாசிவீதி, கிழக்கு மாசி வீதி சந்திப்பு இடத்தில் லாலாஸ்ரீ ரெங்க சத்திரம் திருக்கல் யாண மண்டபத்தில் இந்திர விமானத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி திக் விஜயம் செய்கிறார்.
சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் விழாவாக கருதப்படும் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை (18ஆம் தேதி) காலை 9.30 மணி முதல் 9.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் நடக்கிறது. முன்னதாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகிறார்கள்.
இத்திருக்கல்யாண நிகழ்ச்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50,000 மேற்பட்ட பக்தர்கள் மதுரைக்கு வருவதால் நாளை மதுரையே பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும். பக்தர்களின் தாகத்தை தீர்க்க மதுரை தெரு ஓரங்களில் நீர், மோர், சர்பத் போன்றவை வழங்கப்படும்.
மறுநாள் 19ஆம் தேதி அதிகாலை 4.08 மணி முதல் 4.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி- அம்மன் தேருக்கு வந்து எழுந்தருளுகிறார்கள். காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்.
இத்தேர் நான்கு மாசிவீதி வழியாக சென்று மீண்டும் தேரடிக்கு சென்றடையும். இதிலும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செய்வர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள், நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
20ஆம் தேதி பொற்றாமரை குளத்தில் தீர்த்தம், தேவேந்திர பூஜையும், இரவு 9 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் விடைபெறும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இது குறித்து இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பி.ராஜா கூறுகையில், திருக்கல்யாணம் நிகழ்ச்சியை அயல்நாட்டவர்கள் கண்டு களிக்க கோயில் இணையதளமான www.maduraimeenakshi.org ல் நேரடியாக காட்டப்படுகிறது. பக்தர்கள் அதிகமாக வருவதால் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.