Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண்: சாவில் மர்மம் இருப்பதாக புகார்

தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண்

தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண்: சாவில் மர்மம் இருப்பதாக புகார்
, சனி, 30 ஏப்ரல் 2016 (09:25 IST)
சென்னை திருவேற்காட்டில் இளம்பெண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை புகார் செய்துள்ளார்.


 

 
சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டை சேர்ந்தவர் சுரேஷ். இவர், செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி.
 
இவர்களுக்கு கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1½ வயதில் அக்ஷனா என்ற பெண் குழந்தை உள்ளது.
 
இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் சுரேஷ் வேலைக்கு சென்று விட்டார். இதைத் தொடர்ந்து, வீட்டில் நீண்ட நேரம் குழந்தை அழும் சத்தம் மட்டும் கேட்டுள்ளது.
 
இதை கவனித்த அக்கம், பக்கத்தினர் அந்த வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்துள்ளது.
 
நீண்டநேரம் கதவை தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், திருவேற்காடு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
இதைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர், கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
 
அங்கு தனலட்சுமி, தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அழுது கொண்டிருந்த குழந்தையை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
 
அத்துடன், தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சுரேஷ் தனது மனைவியுடன் உறவினர் ஒருவரது வீட்டுக்கு செல்ல வேண்டியது இருந்ததாகவும், இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது சண்டையாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி திருவேற்காடு காவல்நிலையத்தில் தனலட்சுமியின் தந்தை புகார் செய்தார்.
 
இந்த புகாரின் பேரில், தனலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகம் முழுவதும் 6,812 பேர் வேட்பு மனு தாக்கல்: இன்று பரிசீலனை