Publish Date: Sat, 13 Jul 2024 (08:14 IST)
Updated Date: Sat, 13 Jul 2024 (08:15 IST)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று விடிய விடிய மழை பெய்ததை அடுத்து குளிர்ச்சியான வெப்பநிலை மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள 35 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்திருந்தது. அதுமட்டுமின்றி சென்னையில் இரவு 10 மணி அளவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் கூறியபடியே நேற்று இரவு சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்தது.
சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் நேற்று விடிய விடிய கொட்டி தீர்த்த மழை காரணமாக சென்னையில் தற்போது குளிர்ந்த வெப்ப நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததாகவும் அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் நேற்று இரவு மழை கொட்டியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
மேலும் சூறைக்காற்று காரணமாக 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்களை உள்ளன. சென்னை அண்ணா நகர், கோயம்பேடு, கிண்டி, வேளச்சேரி, ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, எல்ஐசி, சேப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், தியாகராய நகர், வடபழனி, சிந்தாதிரிப்பேட்டை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதாகவும் அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.