Publish Date: Wed, 24 Jun 2020 (07:35 IST)
Updated Date: Wed, 24 Jun 2020 (07:58 IST)
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ள நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த வாரம் வரை தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் சென்னையில் இருந்து மக்கள் வேறு மாவட்டங்களுக்கு புலம்பெயர ஆரம்பித்த நிலையில் இப்போது எல்லா மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக ஆரம்பித்துள்ளது.
இதனால் மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என சொல்லப்படுகிறது.