Publish Date: Mon, 09 Mar 2020 (17:32 IST)
Updated Date: Mon, 09 Mar 2020 (17:28 IST)
தேமுதிகவிடம் எம்பி சீட் வழங்குவதாக ஒப்பந்தம் போடப்படாததால் அவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
வரும் மார்ச் 26 ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து 6 பேர் ராஜ்யசபா தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 3 எம்பி பதவி திமுகவுக்கும் 3 எம்பி பதவி அதிமுகவுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூவர் பெயர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. முக ஸ்டாலின் கூட்டணி கட்சிகள் யாருக்கும் எம்பி பதவி அளிக்காமல் திமுக வேட்பாளர்களையே மூவரையும் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் அதிமுக வேட்பாளர் ராஜ்யசபா வேட்பாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சி ஜி.கே.வாசன் ஆகியோர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ராஜ்யசபா தொகுதி வேண்டும் என தேமுதிமுக ஏற்கனவே கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தேமுதிகவுக்கு சீட் கொடுக்காமல் ராஜ்யசபா எம்பி பதவியை கேட்காத ஜிகே வாசனை அதிமுக தலைமை தேர்வு செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் தேமுதிகவிற்கு சீட் வழங்காதது ஏன் என கே.பி.முனுசாமி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, தேர்தல் ஒப்பந்தத்தின் போது பாமகவிற்கு மட்டுமே மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது.
இதை தவிற மற்ற கட்சிகளுக்கு மாநிலங்களவையில் இடம் கொடுக்கப்படும் என ஒப்பந்தம் போடப்படவில்லை. இது ஒவ்வொரு கூட்டணி கட்சியில் இருக்ககூடியவர்கள் எதிர்பார்ப்பது தான். எனவே, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கூட்டணி கட்சியின் இயல்பை அறிந்து அதிமுக தலைமை முடிவு எடுத்துள்ளது என தெரிவித்தார்.