Publish Date: Wed, 13 Mar 2024 (14:33 IST)
Updated Date: Wed, 13 Mar 2024 (14:48 IST)
நரேந்திரமோடி 3 வது முறையாக பிரதமராக வேண்டும் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் வாக்குறுதியை தயார் செய்து வருகிறது.
இன்னும் சில நாட்களே தேர்தலுக்கு உள்ள நிலையில், நடிகர் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ள நிலையில், அவரது கட்சியைச் சேந்த சிலர் இதுகுறித்து விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நரேந்திரமோடி 3 வது முறையாக பிரதமராக வேண்டும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: '' நாடு செழிக்க நரேந்திரமோடி 3 வது முறையாக பிரதமராக வேண்டும். பாஜகவில் பொறுப்புக்காக இணையவில்லை. பொறுப்புடன் நடந்துகொள்வதற்காக இணைந்துள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், '' பிரதமர் மோடி மீண்டும் அட்சி அமைப்பதற்கு பாஜகவுடன் உறுதுணையாக இருந்து ஏன் செயல்படக்கூடாது என சிந்தித்தேன். 2026-ல் இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜக ஆட்சி அமைத்திட வேண்டும் என்ற எண்ணம் ஆழமாகத்தோன்றியது. எனது 26 ஆண்டு அரசியல் அனுபவத்தை தேச வளர்ச்சிக்கு அர்ப்பணிக்க பாஜகவுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தேன். சமகவில் இருந்து பாஜகவில் சேர்ந்த நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை செய்யப்படும் என மாநில தலைவர் அண்ணாமலை உறுதியளித்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதாரணி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.