அளவில்லாமல் ஆசைப்பட்ட தீபா; கழட்டி விட்ட ஓபிஎஸ்!
அளவில்லாமல் ஆசைப்பட்ட தீபா; கழட்டி விட்ட ஓபிஎஸ்!
Publish Date: Tue, 28 Feb 2017 (10:04 IST)
Updated Date: Tue, 28 Feb 2017 (10:08 IST)
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சில தினங்களுக்கு முன்னர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை உருவாக்கி தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்தார். அன்றைய தினமே தனது பேரில் ஆரம்பித்த அந்த பேரவையின் கொடியையும் அறிமுகம் செய்தார் தீபா.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சி ஒரே அணியில் சசிகலாவின் பின்னால் நின்றதை விரும்பாத தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவுக்கு ஆதரவு வழங்கினர். அதன் பின்னர் சசிகலாவுடன் இருந்த ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கி தனியாக வந்த பின்னர் பெரும்பாலான தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் வந்தனர்.
ஆனாலும் தீபாவுக்கு குறிப்பிட்ட தொண்டர்கள் ஆதரவு அளித்து தான் வந்தனர். இந்நிலையில் ஓபிஎஸும் தீபாவும் ஜெயலலிதாவின் சமாதியில் சந்தித்தனர். பின்னர் ஓபிஎஸ் தனது வீட்டிற்கு தீபாவை அழைத்து சென்று ஆரத்தி எடுத்து வரவேற்று நல்ல மரியாதை அளித்தார்.
அப்போது பேசிய தீபா தான் ஓபிஎஸுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தார். ஆனால் பின்னர் அதில் இருந்து விலகி புதிய பேரவை ஒன்றை தொடங்கி, ஓபிஎஸுடன் கூட்டணி இல்லை என தனியாக செயல்பட ஆரம்பித்துள்ளார்.
தீபாவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் ஓபிஎஸ் அணியிடம் தான் வைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லையாம். தீபா ஓபிஎஸ் அணியிடம் இரண்டு கோரிக்கைகள் வைத்துள்ளார். ஓபிஎஸ் அணியில் தாம் இணைய வேண்டுமானால் தம்மை முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டும். அதேபோல் அதிமுக பொதுச்செயலர் பதவியும் தமக்கு தரப்பட வேண்டும் என்று தீபா கேட்டதாக அதிமுகவின் ஓபிஎஸ் அணி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அரசியலில் இப்போது தான் குதித்துள்ள தீபாவின் இந்த ஆசை ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இதனால் தீபாவின் ஆசைக்கு தடை போட்டதாகவும், அதனால் தான் தீபா தனியாக சென்று தனது பெயரிலேயே பேரவையை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.