Publish Date: Wed, 20 Nov 2019 (19:51 IST)
Updated Date: Wed, 20 Nov 2019 (19:54 IST)
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேயர் பதவிகளுக்கான தேர்தலில் மக்கள் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கும் நடைமுறை இருந்து வந்த நிலையில் அதை மாற்றி கவுன்சிலர்களால் மேயர் தேர்ந்தெடுக்கப்படும் மறைமுக தேர்தலை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
இதனால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் செம அப்செட்டில் இருக்கின்றனவாம். இது ஜனநாயக முறைக்கு விரோதமானது என முக ஸ்டாலின் அறிக்கை விட்டுள்ளார். எனினும் இது ஒரு விதத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு மறைமுகமாக போடப்பட்ட முட்டுக்கட்டை என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.
சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த உதயநிதி ஸ்டாலின் திடீரென அரசியல் களம் கண்டார். மக்களவை தேர்தல், இடைத்தேர்தல்களில் சென்று பரப்புரை செய்தார். திமுக அவருக்கு ஸ்டாலின் வகித்து வந்த இளைஞரணி செயளாலர் பதவியையும் வழங்கியது.
அடுத்தக்கட்டமாக உள்ளாட்சி தேர்தலில் உதயநிதியை மேயர் பதவியில் போட்டியிட செய்ய திட்டம் வகுத்ததாக கூறப்படுகிறது. உதயநிதியே நேராக மனு அளிக்காவிட்டாலும், அவரது ஆதரவாளர்கள் அவர் பெயரில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஒருவேளை உதயநிதி சென்னை மாநகர் மேயர் பதவிக்கு போட்டியிட்டால் அவரை வெற்றிபெற செய்ய திமுக ஐடி விங்கும், சென்னை மாநகர் திமுகவும் இப்போதே பணிகளை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக மறைமுக தேர்தலை கொண்டு வந்தது எதிர்க்கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த யூகங்களை எல்லாம் தாண்டி அதிமுக மறைமுக வாக்கெடுப்பு கொண்டு வந்ததே தன்னுடை கூட்டணி கட்சிகளை சாமாளிக்கதான் என்றும் பேசப்பட்டு வருகிறது.