Publish Date: Wed, 03 Oct 2018 (18:43 IST)
Updated Date: Wed, 03 Oct 2018 (18:46 IST)
லட்சத்தீவு பகுதியில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக தமிழ்நாடு வெத்ர்மேன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியது பின்வருமாறு, வரும் 5 ஆம் தேதி அல்லது அதன்பின் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் லட்சத்தீவுக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது.
இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல நகர்ந்து தாழ்வு மண்டலமாக மாறி அது ஓமன் கடற்பகுதியை நோக்கிச் செல்லும். ஆனால், அது புயலாக மாறுமா என்று இப்போது கூற இயலாது.
இந்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்துக்கு அச்சப்படக்கூடிய அளவுக்கு பெருமழை இருக்காது. கோவை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களும் தென் மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புண்டு.
தெற்கு வங்கக் கடல், இலங்கை மற்றும் தமிழக கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாகவும் தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உண்டு என தெரிவித்துள்ளார்.