Publish Date: Fri, 09 Feb 2018 (15:20 IST)
Updated Date: Fri, 09 Feb 2018 (15:22 IST)
அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு வரும் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்து வருகிறார். அதிமுகவை கைப்பற்ற பகிரீத முயற்சிகளை மேற்கொண்டு வரும் தினகரனை தாங்கள் ஒரு போட்டியாகவே பார்க்கவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா, தினகரனை குறிவைத்து பல வருமான வரித்துறை சோதனைகள் நடந்தன. இந்நிலையில் மத்திய அரசு குறிவைத்து தினகரனின் சொத்துக்களை முடக்கும் முயற்சியில் உள்ளதாக கூறப்பட்டது. இதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை பதிலளித்துள்ளார்.
அதில், மத்திய அரசு தினகரனின் சொத்துகளை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுவது தவறு. தினகரன் அதிமுக ஆட்சி தொடர ஆறு அமைச்சர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களை நீக்கினால் ஆதரவு தருவேன் என்று குறிப்பிட்டுள்ளது அவர்களது உட்கட்சி பிரச்னை. அதில் தலையிட பாஜக விரும்பவில்லை. தினகரனைப் போட்டியாக நாங்கள் கருதவில்லை என அசால்ட்டாக கூறியுள்ளார்.
ஆனால் பாஜக ஆர்கே நகர் தொகுதியில் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று மண்ணை கவ்வியது. அந்த தேர்தலில் தினகரன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.