தன்னை காதலித்துவிட்டு ஏமாற்றியதால் பழி வாங்கவே, வினுப்பிரியாவை ஆபசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டதாக, கைதான சுரேஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த இடங்கனசாலை புவன கணபதி தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரதுமகள் வினுப்பிரியா. தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரின் புகைப்படங்கள், மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு, பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வினுப்பிரியா மற்றும் அவரின் குடும்பத்தினர் காவல்துறைக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் வினுப்பிரியா அவமானம் தாங்காமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசர் விசாரணையில், அதில் ஏர்சல் நிறுவன மொபைல் எண் மூலம் ஆபாச படம் வெளியிடப்பட்டது தெரியவந்தது. இளம்பிள்ளை அருகே உள்ள கல்பாரப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்(22) என்பவர் தான், அந்த புகைப்படத்தை வெளியிட்டது என்பது தெரியவந்ததை அடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சுரேஷ், அவர் தான் ஃபேஸ்புக்கில் மார்பிங் செய்து வெளியிட்டது என்பதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில் “ நானும் வினுப்பிரியாவும் காதலித்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வினுப்பிரியாவிற்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதனால் அவர் என்னை தவிர்க்க ஆரம்பித்தார். நான் எவ்வளவு எடுத்துக் கூறியும் அவர் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அவரது வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோர்களிடம் பெண் கேட்டேன். ஆனால் அவர்கள் என்னை சமாதானப்படுத்தி அனுப்பி விட்டனர்.