Publish Date: Mon, 20 Apr 2020 (18:57 IST)
Updated Date: Mon, 20 Apr 2020 (18:58 IST)
கொரோனா பாதிப்பு குறித்து நடவடிக்கை எடுத்து வரும் மத்திய மற்றும் மாநில அரசு குறித்து ஆலோசனை செய்ய சமீபத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் காணொளியில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் எடுத்த முடிவின்படி ஒரு சில தீர்மானங்களை ஏற்றப்பட்டது. அதில் ஒரு தீர்மானமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்த போது கொரோனாவால் உயிரிழந்த பிறகு ரூபாய் ஒரு கோடி கொடுப்பது முக்கியமா? அல்லது அவர்களை உயிரிழக்க விடாமல் காப்பாற்றுவது முக்கியமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்
மேலும் தமிழகத்தில் கொரோனா சமூக பரவாகவில்லை என்றும் ரேபிட் கிட் விலை விவகாரத்தில் முக ஸ்டாலின் அவர்கள் மலிவான அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதை யாரும் தடுத்து நிறுத்த வேண்டாம் என்றும் அவ்வாறு தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இன்று கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதை தடுத்த 20 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்