Publish Date: Tue, 23 Oct 2018 (13:41 IST)
Updated Date: Tue, 23 Oct 2018 (13:43 IST)
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பழச்சாற்றில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துவிட்டு, அதன்பின் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை ஜெயக்குமார் உறவில் இருந்துள்ளார் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. அதில், சிபாரிசுக்கு வந்த தனது மகளை இப்படி செய்து விட்டீர்களே.. தற்போது குழந்தை பிறந்து விட்டது என்ன செய்ய? என அப்பெண் புலம்புவது பதிவாகியிருந்தது. மேலும், அந்த பெண்ணிற்கு பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் டி.ஜெயக்குமார் என பதிவிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த புகாரை ஜெயக்குமார் மறுத்துள்ளார். ஆடியோவை மாபிங் செய்துள்ளனர். இதுபற்றி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல் எம்.எல்.ஏ “ சிபாரிசுக்காக வந்த பெண்ணுக்கு ஜெயக்குமார் வீட்டில் பழச்சாறு கொடுத்துள்ளனர். அதில் மயங்கிய பெண்ணை அவர் கற்பழித்துள்ளார். இதுபற்றி அவரின் தாய் கேட்டதற்கு, அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாய் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதன் பின் பல இடங்களுக்கு அப்பெண்ணை வரவழைத்து கற்பழித்துள்ளார். திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் அப்பெண்ணை அவர் பலமுறை சந்தித்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது” என அதிர்ச்சி பேட்டியளித்துள்ளார்.