Publish Date: Sun, 23 May 2021 (11:46 IST)
Updated Date: Sun, 23 May 2021 (11:49 IST)
காய்கறிகளை மொத்தமாக வாங்க வேண்டாம்: தினமும் நடமாடும் வாகனங்கள் வரும்: அமைச்சர்
ஒருவாரத்திற்கு தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தினமும் தோட்டக்கலைத் துறையின் நடமாடும் வாகனங்கள் வரும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்
நாளை முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு என்பதால் அனைத்து கடைகளும் இன்று ஒருநாள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றே ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்க வேண்டும் என பொதுமக்கள் காய்கறி கடைகளில் முண்டியடித்து வருகின்றனர். இதனால் தனிமனித இடைவெளியை பலர் கடைபிடிக்காமல் இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி காய்கறி விலையும் விண்ணை தொட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னையில் முழு ஊரடங்கு காலத்திலும் தோட்டக்கலைத்துறை உதவியுடன் நடமாடும் வாகனங்கள் மூலம் தினமும் காய்கறி விநியோகிக்கப்படும் என்றும் எனவே காய்கறிகளை மொத்தமாக வாங்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.