வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு நிலை வர்தா புயலாக உருவானது. இந்தப்புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடப்பதால், வட தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சற்று முன்பு இந்த வர்தா புயல் தீவிரமடைந்ததையடுத்து சென்னை அருகே கரையை கடந்து கொண்டிருப்பதால், அதிக இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. சென்னை முழுவதும் பல இடங்களில் மின்தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 7357 பேர் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் 54 நிவாரண மையங்களில் பாதுகாப்பாக உள்ளனர். இதே போல, ஆந்திர மாநிலத்தில் இதுவரை 9400 பேர் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரவித்துள்ளது.
இந்நிலையில் வர்தா புயலின் மையப் பகுதி மதியம் 3.30 மணி அளவுக்கு கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், புயல் கரையைக் கடந்த பின்பும் 12 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இரவு 7 மணி வரை ‘வர்தா’ புயலின் பாதிப்பு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போதைய சூழலுக்கு மணிக்கு 108 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.