Publish Date: Sun, 21 Jul 2019 (18:58 IST)
Updated Date: Sun, 21 Jul 2019 (19:00 IST)
சூர்யா சமீபத்தில் பேசிய புதிய கல்வி கொள்கை குறித்த பேச்சுக்கு அதிமுக, பாஜக தலைவர்கள் தவிர கிட்டத்தட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துவிட்டனர். அந்த வகையில் தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமூக நீதியிலும், மாநில சுயாட்சியிலும் மாறாத பற்று கொண்டவர்கள் நடிகர் சூர்யாவை ஆதரித்து குரல் தந்தபோது நான் மகிழ்ந்தேன். நடிகர் சூர்யாவின் விளக்கத்தைப் பத்திரிகைகளில் படித்தபோது, அவரது மனிதாபிமானப் பண்பை எண்ணி வியந்தேன், திகைத்தேன். கலை உலகில் வெள்ளித் திரையில் ஒளிவிடும் நட்சத்திரம், அன்னை தெரசா போன்றவர்கள் செய்த தியாகப் பணியின் சாயல் சூர்யாவின் அகரம் பவுண்டேசனில் திகழ்வதை எண்ணி மிகவும் பரவசம் அடைந்தேன்.
நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது நன்மையாக முடிந்தது. “இன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்” என்ற சேக்ஸ்பியரின் வாசகம்தான் சூர்யா பிரச்சினையில் நடந்துள்ளது. போற்றுதலுக்குரிய சூர்யா போன்ற இளைஞர்களே நலிந்து வரும் தமிழ்ச் சமூகத்திற்கு தோள் கொடுத்து உயர்த்துவார்கள் எனப் பாராட்டுகிறேன்
இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.