Publish Date: Fri, 09 Aug 2019 (09:17 IST)
Updated Date: Fri, 09 Aug 2019 (09:17 IST)
கலைஞரின் ஓராண்டு நினைவஞ்சலியை ஒட்டி நடந்த அவரது சிலைதிறப்பு விழாவில் வைகோவுக்கு உரிய மரியாதைக் கொடுக்கப்படவில்லை எனப் பேச்சுகள் எழுந்துள்ளன.
திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நேற்று முன் தினம் திமுகவினரால் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திமுக நாளேடான முரசொலி அலுவலகத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலைஞரின் சிலையைத் திறந்துவைத்தார். சிலை திறப்புக்குப் பின் ராயப்பேட்டையிலுள்ள ஓய்எம்சிஏ திடலில் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.
அந்தப் பொதுக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, புதுவை முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து மட்டுமே பேச வாய்ப்பளிக்கப்பட்டனர். அந்த விழாவில் கலந்துகொண்ட வெறும் பார்வையாளராக மட்டுமே அமரவைக்கப்பட்டார். பேசியவர்களை எல்லாம் விட கலைஞரை நன்றாக அறிந்தவரும் அவரோடு நெருக்கமாக பழகியவருமான வைகோ பேச வைக்கப்படாதது விழாவுக்கு வந்தவர்களுக்கே ஆச்சர்யத்தை அளித்தது. இதனால் வைகோ அதிருப்தியடைந்துள்ளதாக தெரிகிறது.