பெண்களிடம் தவறாக நடந்த அதிமுகவின் வைகைச்செல்வன்?: போட்டுடைத்த அமைச்சர்!
பெண்களிடம் தவறாக நடந்த அதிமுகவின் வைகைச்செல்வன்?: போட்டுடைத்த அமைச்சர்!
Publish Date: Wed, 28 Jun 2017 (09:19 IST)
Updated Date: Wed, 28 Jun 2017 (09:23 IST)
அதிமுக செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதால் தான் அவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்து நீக்கியதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனுக்கும் இடையே வார்த்தைப்போர் நீடித்து வருகிறது. பாலில் கலப்படம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதை அடுத்து பாலில் கலப்படம் இல்லை என ஆய்வில் கூறப்பட்டது.
இதனையடுத்து வைகைச்செல்வன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ராஜினாமா செய்ய வலியுறுத்தினார். இதனால் கோபமடைந்த அமைச்சர் வைகைச்செல்வனை காசு கொடுத்தால் யாருக்காகவும் பேசும் கூலிப்பேச்சாளர் என விமர்சித்தார்.
இதற்கு வைகைச்செல்வன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தெருத்தெருவாய் சினிமா போஸ்டர் ஒட்டியவர் என தனிப்பட்ட விமர்சனம் செய்ய துவங்கினார். இந்நிலையில் வைகைச்செல்வனின் இந்த விமர்சனம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ராஜேந்திர பாலாஜி, வைகைச்செல்வன் ஒரு லூசு, சீக்கு வந்த பிராய்லர் கோழி, அழுகிப்போன தக்காளி, குழம்புக்கு ஆகாது. நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தனியார் பால் முகவர் போல பேசும் வைகைச்செல்வன் அதிமுகவா?.
தனியார் பால் நிறுவனங்களிடம் விலை போய் விட்டதால்தான் அவர் இப்படி பேசுகிறார். சினிமா போஸ்டரை நான் ஓட்டவில்லை. கட்சி போஸ்டரை மட்டுமே ஒட்டினேன். விருதுநகர் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளேன். இதை நானே கட்சி பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளேன். போஸ்டர் ஒட்டுவது என்ன குற்றச்செயலா?.
வைகைச்செல்வனை பதவியை விட்டு அம்மா நீக்கியது, அரசியல் காரணங்களூக்காகவோ, உட்கட்சி பூசல் காரணங்களுக்காகவோ இல்லை. பெண்களிடம் அவர் தவறான முறையில் நடந்துகொண்டதால்தான் அவரை பதவியில் இருந்து நீக்கினார் என்றார் ஒரே போடாக.