Publish Date: Thu, 06 Sep 2018 (11:20 IST)
Updated Date: Thu, 06 Sep 2018 (11:24 IST)
குட்கா விவகாரம் தொடர்பாக மொத்தம் 35 இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ போலீசார் தற்போது 2 பேரை கைது செய்துள்ளனர்.
குட்கா விவகாரம் தொடர்பாக நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே. ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ், உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று சிபிஐ ரெய்டு நடத்தியது.
நேற்று முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் நடந்த சோதனையில் 7 சிபிஐ அதிகாரிகள் 25 மணி நேரமாக சோதனை நடத்தியதாகவும் இந்த சோதனையின் முடிவில், 2 பைகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த ஆவணங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் இன்னும் கருத்து எதுவும் சொல்லவில்லை. இன்று காலை அவரின் வீட்டில் சோதனை முடிவிற்கு வந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 2 பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் 2 பேரும் புரோக்கர்களாக செயல்பட்டவர்கள் எனத் தெரிகிறது. கைது செய்யப்பட்ட 2 பேரையும்சென்னையில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பின் அவர்களை டெல்லி அழைத்து செல்லவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.