பள்ளி சிறுவர், சிறுமிகளை மிரட்டி ஆபாச படம் எடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பி ஓடிய இன்னொருவரை போலீசார் தேடி வருவதாக கூறப்படும் தகவல் உசிலம்பட்டி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பள்ளி சென்று வீடு திரும்பிய ஐந்து சிறுமிகள் மற்றும் இரண்டு சிறுவர்களை பழனி, அலெக்ஸ்பாண்டி ஆகிய இருவர் மிரட்டியதாகவும், ஆடைகளை கழற்ற சொல்லி ஆபாசமாகத் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்ததாகவும் தெரிகிறது.
இதனை அடுத்து, அந்த சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறிய நிலையில், போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்து பழனி மற்றும் அலெக்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், இவர்களுடன் இருந்த ரவி என்பவர் தப்பி ஓடிவிட்டதாகவும், செல்போனுடன் தப்பிய ரவியை பிடிக்க போலீசார் வலை வீசி உள்ளதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பள்ளி சிறுவர், சிறுமிகளை மிரட்டி ஆபாசமாக படம் பிடித்தவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.