Publish Date: Wed, 30 Aug 2017 (13:39 IST)
Updated Date: Wed, 30 Aug 2017 (13:42 IST)
முதல்வர் பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் ராஜினாமா செய்வார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைந்த பின், தினகரன் தனித்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர் “ அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து விட்டாலும் சசிகலாதான் கட்சியின் பொதுச்செயலாளர். பொதுக்குழுவை கூட்டும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு. மாறாக எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் பொதுக்குழுவை கூட்ட முடியாது.
யாருக்கோ பயந்து, தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள எடப்பாடி துரோகம் செய்கிறார். கட்சியை கலைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை. துரோகம் மற்றும் சுயநலம் இல்லாத ஒருவர் முதல்வராக வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
எனவே, அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி அவராகவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார். விரைவில் எங்கள் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 40 ஆக உயரும்” என அவர் தெரிவித்தார்.