Publish Date: Tue, 09 Jun 2020 (12:13 IST)
Updated Date: Tue, 09 Jun 2020 (12:00 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #மாணவர்நலனில்_அமமுக என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை வரும் 15 ஆம் தேதி நடத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தேர்வை நடத்த வேண்டாம் என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மட்டுமன்றி சென்னை உயர்நீதிமன்றமும் கருத்துக் கூறியது.
இது குறித்த வழக்கு நடைபெற்ற போது சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் காரசாரமான கேள்விகளைக் கேட்டது என்பதும் அதற்கு தமிழக அரசு தரப்பில் பதில் கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைப் போல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திட வேண்டும்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வை நடத்தியே தீருவது என பிடிவாதம் பிடிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நோயைக் கட்டுபடுத்த தவறு செய்ததைப் போல் இவ்வளவு ஆபத்திற்கிடையே பொதுத்தேர்வை நடத்தி மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டாமென தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளமான டிவிட்டரில் #மாணவர்நலனில்_அமமுக என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.