Publish Date: Sun, 03 Sep 2017 (17:00 IST)
Updated Date: Wed, 05 Dec 2018 (13:00 IST)
நீட் தேர்வு தொடர்பாக திமுக நடத்தும் அனைத்து கட்சிகள் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் “அனிதாவின் மரணத்திற்கு பொறுப்பேற்று நிர்மலா சீத்தாராமன், முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் என அனைவரும் பதவி விலக வேண்டும். அதேபோல், நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்து கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க செப்.5ம் தேதி சென்னை அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்” என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அந்த கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று அறிவித்துள்ளார். எனவே, தினகரனை ஆதரிக்கும் 19 அதிமுக எம்.எல்.ஏக்களில் சிலர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தினகரன், திமுக கூட்டத்தில் எங்கள் ஆதரவாளர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.