Publish Date: Tue, 06 Jul 2021 (12:26 IST)
Updated Date: Tue, 06 Jul 2021 (12:28 IST)
கர்நாடகா மேகதாட்டு அணை விவகாரத்தில் கடிதம் மூலமான வலியுறுத்தல்களை தாண்டி சட்ட நடவடிக்கை தேவை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேகதாட்டு அணை கட்டும் முயற்சிகளை கைவிட கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் “மேகேதாட்டு பகுதியில் அணைகட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அப்படி ஓர் அணை உருவானால் ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். எனவே, தமிழக அரசு கடிதம் மட்டும் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகேதாட்டு அணை பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். நீதிமன்றத்தின் வழியாகவும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.