Publish Date: Sun, 24 Dec 2017 (11:40 IST)
Updated Date: Sun, 24 Dec 2017 (11:42 IST)
தமிழக மக்களின் எண்ணத்தை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் பிரதிபலித்துள்ளனர் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, சென்னை இராணி கல்லூரியில் நடைபெற்று வருகிறது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. தற்போது வரை 3 சுற்றுக்கள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளது.
இதில், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட தினகரன் 8835 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.
இதுபற்றி மதுரையில் கருத்து தெரிவித்த டிடிவி தினகரன் “ஜெயலலிதாவிற்கு பின் யார் வரவேண்டும் என மக்கள் முடிவு செய்துள்ளனர். தமிழக மக்களின் எண்ணத்தை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் பிரதிபலித்துள்ளனர். சின்னமோ, கட்சியின் பெயரோ யாரிடம் இருப்பது என்பது முக்கியமில்லை. வேட்பாளரை வைத்தே சின்னம் நிர்ணயிக்கப்படுகிறது. கேரள எல்லையில் கூட குக்கர் சின்னம் வெற்றி பெற வேண்டும் என மக்கள் வாழ்த்தினர். ஆர்.கே.நகர் வெற்றிக்கு பாடுபட்ட ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என் நன்றி” என அவர் தெரிவித்துள்ளார்.