Publish Date: Wed, 14 Mar 2018 (17:20 IST)
Updated Date: Wed, 14 Mar 2018 (17:25 IST)
தான் தனிக்கட்சி தொடங்கவில்லை எனவும், புதிய அணியின் பெயரைத்தான் நாளை அறிவிக்க இருக்கிறோம் என ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பி.எஸ் ஆகியோருக்கு எதிராகவும், அதிமுகவின் மற்றொரு அணியாகவும் தினகரன் செயல்பட்டு வருகிறார். அவர் பக்கம் 11 எம்.எல்.ஏக்களும், சில எம்.பிக்களும் உள்ளனர். அந்நிலையில், குக்கர் சின்னத்தில் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.
தனது புதிய கட்சிக்கு ஏற்கனவே டெல்லி நீதிமன்றத்தில் பரிந்துறை செய்திருந்த அனைத்து இந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்.ஜி.ஆா். அம்மா முன்னேற்ற கழகம் மற்றும் அம்மா எம்.ஜி.ஆா். முன்னேற்ற கழகம் ஆகிய மூன்றில் ஒன்றை தனது கட்சியின் பெயராக டிடிவி தினகரன் அறிவிக்க உள்ளதாகவும், மார்ச் 15ஆம் தேதி மதுரையில் அவர் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. அந்நிலையில், மதுரையில் நாளை நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் “நாங்கள் புதிய கட்சியை துவங்கவில்லை. எங்கள் அணியின் புதிய பெயரைத்தான் நாளை அறிவிக்க இருக்கிறோம். கட்சி அல்ல” என பேட்டியளித்துள்ளார்.