Publish Date: Sun, 23 May 2021 (11:29 IST)
Updated Date: Sun, 23 May 2021 (11:31 IST)
இன்று தமிழக சந்தைகளில் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை என வணிகர் சங்கம் எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாரமாக தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்தது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இன்று அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சந்தைகளில் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த திடீர் விலை உயர்வு குறித்து பேசியுள்ள தமிழக வணிகர் சங்க கூட்டமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா “மக்களின் இக்கட்டான சூழலை வைத்து அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பது கண்டிக்கத்தக்கது. வணிகர் சங்கத்தின் பெயரை கெடுக்கும் வகையில் சில கருப்பாடுகள் இந்த வேலையை செய்து வருகின்றனர். இவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் கண்டறியப்பட்டால் சங்கத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.