Publish Date: Thu, 05 Dec 2019 (19:55 IST)
Updated Date: Thu, 05 Dec 2019 (23:07 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த வடகிழக்கு பருவமழை தற்போது ஓரளவுக்கு குறைந்த நிலையில் நாளைய மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
குமரிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சூறாவளி காற்று 40 செ.மீ முதல் 50 செ.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்று குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிக்கும் நாளை லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிக்கும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் கடவூர், சாத்தூர், கொட்டாரம், வீராகனூர் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது.
கடந்த 2 நாட்களாக படிப்படியாக மழை குறைந்து வருகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் மேலும் 2 நாட்களுக்கு பிறகுதான் மழைக்கு வாய்ப்பு இருக்கக்கூடும். இன்னும் சென்னைக்கு போதுமான மழை கிடைக்கவில்லை. மற்ற மாவட்டங்களில் இயல்பை விட அதிகம் பெய்துள்ளது.