Publish Date: Thu, 25 Mar 2021 (13:04 IST)
Updated Date: Thu, 25 Mar 2021 (13:06 IST)
ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு டோக்கன்: திமுக குற்றச்சாட்டு!
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுப்பதற்காக டோக்கன் கொடுத்து வருகின்றனர் என்றும் இதனை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் திமுக குற்றஞ்சாட்டியுள்ளது
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கும் முறையை டிடிவி தினகரன் தான் ஆர்மபித்து வைத்ததாக செய்திகள் வெளியானது. இதனால் தான் அந்த தொகுதியில் டிடிவி தினகரன் வென்றார் என்றும் கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போதும் அதே ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதற்காக அதிமுக சார்பில் டோக்கன் கொடுக்கப்படுகிறது என துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார். இது குறித்து புகார் அளித்தாலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்
மேலும் டோக்கன் குறித்த புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ராஜேஷ் என்பவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.