Publish Date: Thu, 05 Oct 2023 (14:21 IST)
Updated Date: Thu, 05 Oct 2023 (14:22 IST)
இன்று பிற்பகல் 2 மணிக்கு அண்ணாமலை தலைமையில் நடைபெற இருந்த பாஜக உயர்நிலைக் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பாஜக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக உடன் கூட்டணி முறிந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக இன்று காலை பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்திற்கு அண்ணாமலை வரவில்லை என்பதால், கேசவ விநாயகம், எச்.ராஜா ஆகியோர் தலைமையில் பாஜக கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து அண்ணாமலை தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பாஜக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறும் என்றும், சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றும் இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணி முறிவு, பாஜக தலைமையில் ஒரு புதிய கூட்டணி ஆகியவை ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் சற்றுமுன் வெளியான தகவலின்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு அண்ணாமலை தலைமையில் நடைபெற இருந்த பாஜக உயர்நிலைக் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அடுத்த கூட்டம் நடைபெறும் தேதி குறித்த எந்தவித அறிவிப்பும் இல்லை.