Publish Date: Wed, 22 Mar 2023 (08:45 IST)
Updated Date: Wed, 22 Mar 2023 (08:47 IST)
டிஎன்பிஎஸ்சி க்ரூப்-4 தேர்வுகளுக்கான முடிவுகள் இன்னும் வெளியாகாமல் உள்ள நிலையில் குரூப்-4 பதவிகளில் மேலும் காலி பணியிடங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆண்டுதோறும் அரசு பணிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது. இதில், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சாளர் உள்ளிட்ட அரசு பணிகளை பெறுவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுகள் அதிகமானோரால் ஆண்டுதோறும் எழுதப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 7,301 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் அதில் சுமார் 18,50,000 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே வெளியிடப்பட்டிருக்க வேண்டிய சூழலில் தற்போது வரை முடிவுகள் வெளியாகாமல் உள்ளது. இந்த மாத இறுதிக்குள் குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குரூப்-4 பிரிவில் மேலும் பல புதிய காலி பணியிடங்கள் உருவாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தற்போது 2,816 புதிய காலி பணியிடங்கள் உருவாகியுள்ள நிலையில் மொத்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை 10,117 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த காலி பணியிடங்களுக்கான பணியாளர்கள் தேர்வு கடந்த ஆண்டு நடந்த தேர்வின் அடிப்படையிலேயே நடத்தப்படுமா அல்லது இதற்கு புதிய தேர்வுகள் நடத்தப்படுமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.