Publish Date: Wed, 10 Jan 2018 (18:13 IST)
Updated Date: Wed, 10 Jan 2018 (18:15 IST)
தமிழக அசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க தயார் என தொழிற்சங்கங்கள் தற்காலிகமாக ஏற்க தயார் என ஏற்றுக்கொண்டிருப்பதால் விரைவில் போராட்டம் வாபாஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்கிறது.
போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் பலமுறை எச்சரித்தும் போராட்டத்தை ஊழியர்கள் கைவிடவில்லை. தங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அரசு தரப்பில் பேசவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அரசு தரப்போ அதை ஏற்க மறுத்து வருகிறது.
வருகிற 13ம் தேதி பொங்கல் பண்டிகை தொடங்குவதால், சென்னையில் பணிபுரியும் லட்சக்கணக்கானோர் வருகிற 12ம் தேதி தங்களின் சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் அவர்கள் எப்படி செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று காலை முதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், பொங்கல் பண்டிகை காரணமாக பொதுமக்கள் அவதிப்படுவதை தவிர்க்க, தற்காலிமாக அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வை ஏற்க தயார் என தொ.மு.ச மற்றும் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கங்கள் கூறியுள்ளனர். அதேநேரத்தில், 2.57 காரணி ஊதிய உயர்வு குறித்து தொடர்ந்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் அவர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே, அரசின் ஊதிய உயர்வை ஏற்றுக்கொண்டுவிட்டதால், தமிழக போக்குவரத்து ஊழியர்கள் இன்று இரவு அல்லது நாளை காலை முதல் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.