Publish Date: Mon, 28 Feb 2022 (10:42 IST)
Updated Date: Mon, 28 Feb 2022 (10:43 IST)
ருமேனியா எல்லைக்கு வந்த தமிழக மாணவ, மாணவிகள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர் என தகவல்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.
உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை விமானம் மூலமாக மீட்க மத்திய அரசு “ஆபரேஷன் கங்கா” திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன்மூலம் உக்ரைனின் எல்லைப்பகுதிகள் வழியாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை நான்கு விமானங்கள் மூலமாக பலர் மீட்கப்பட்டனர்.
அதை தொடர்ந்து நேற்று ருமேனியா தலைநகர் புகாரெஸ்டிலிருந்து 249 இந்தியர்களுடன் 5வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்துள்ளது. இதுவரை உக்ரைனில் இருந்து 1,156 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ருமேனியா எல்லைக்கு வந்த தமிழக மாணவ, மாணவிகள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. மீட்பு விமானங்கள் வரவில்லை எனவும், அழைத்துச் செல்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் தமிழக மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மேலும் உக்ரைனில் இருந்து தப்பித்து ருமேனிய எல்லையை அடைய இந்திய மாணவர்கள் சுமார் 5-8 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது என்று கிழக்கு ஐரோப்பிய நாட்டிலிருந்து வந்த தமிழக மாணவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.