Publish Date: Fri, 13 Oct 2017 (09:43 IST)
Updated Date: Fri, 13 Oct 2017 (09:45 IST)
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் டெங்கு காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. கொசுக்களால் உருவாகும் இந்த காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி பலரும் உயிரிழந்துள்ளனர். ஒருபுறம், டெங்குவை ஒழிக்க அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக உட்பட பல அரசியல் கட்சிகள் புகார் கூறி வருகின்றன.
இந்நிலையில், பூச்சிகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து தமிழக அரசு இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் டெங்குவால், கடந்த அக்டோபர் 9ம் தேதி வரை 40 பேர் பலியாகியுள்ளனர் எனவும் 11 ஆயிரத்து 744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 9ம் தேதிக்கு பின்னரும் டெங்குவால் தமிழகத்தில் பலர் உயிரிழந்துவிட்டனர்.
எனவே, டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இது ஒருபக்கம் என்றாலும், தமிழகத்திற்கு ஆட்டிப்படைக்கும் இந்த டெங்குவை கட்டுப்படுத்த தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்துமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜெ.வின் ஆட்சி காலத்தில் இது போன்ற பல பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அவர் சிறையில் இருந்த போதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அதிமுக தொண்டர்கள் அவருக்காக கோவில்களில் பூஜைகள் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.