Publish Date: Sat, 17 Feb 2018 (13:49 IST)
Updated Date: Sat, 17 Feb 2018 (13:53 IST)
தமிழக பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனவும், அதன் மூலம் பிளஸ் 2 படித்தவுடனேயே வேலை வாய்ப்பு கிடைக்கும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மற்றும் திருப்பூரில் உள்ள பள்ளிகளில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளில் இன்று செங்கோட்டையன் கலந்து கொண்டார். அதன் பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழக பாடத்திட்டம் உலக தரத்திற்கு மாற்றி அமைக்கப்படும். மாணவர்களின் சீருடைகளையும் மாற்ற திட்டமிட்டிருக்கிறோம். அதன் பின்பு, தனியார் பள்ளி மாணவர்களும் அரசு பள்ளிகளை தேடி வந்து சேரும் நிலை உருவாகும்.
அதேபோல், புதியாக உதவி மையம் கொண்டு வரப்பட இருக்கிறது. உயர்நிலை பள்ளியிலிருந்து மேல்நிலைக்கு செல்லும் போது என்ன பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்கலாம்?. கல்லூரிக்கு செல்லும் போது எந்த மாதிரியான பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம் என்பது தொடர்பான தகவல்களை அதில் தெரிந்து கொள்ளலாம்.
2018-19 கல்வியாண்டில் 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும். அடுத்த ஆண்டுக்குள் 8ம் வகுப்புகளுக்கும் என அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும். அதன் மூலம், பிளஸ் 2 படித்தவுடன் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்” என அவர் தெரிவித்தார்.