Publish Date: Tue, 02 Mar 2021 (11:58 IST)
Updated Date: Tue, 02 Mar 2021 (12:01 IST)
தமிழகத்தில் பள்ளி பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தகுதி தேர்வு நடத்தலாமா என கல்வித்துறையில் ஆலோசனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகளால் பள்ளிகள் கடந்த ஒரு ஆண்டாக திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் பலர் ஆன்லைன் மூலமாகவே படித்து வந்தனர். இந்நிலையில் 9,10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான ஆண்டு பொதுத்தேர்வை இந்த ஆண்டும் ரத்து செய்து அனைத்து மாணவர்களுக்கும் ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு மாணவர்கள் அடுத்த கட்டமாக 11ம் வகுப்பு செல்லும்போது குறிப்பிட்ட பாடங்கள் கொண்ட தொகுப்பை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உள்ள நிலையில் அனைவருக்கும் பாஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் பலரும் ஒரே க்ரூப்பை தேர்ந்தெடுக்கும் பிரச்சினைகளும் உள்ளன. இதனால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறிய அளவிலான நுழைவு தேர்வு நடத்தி அதில் கிடைக்கும் மதிப்பெண் பொறுத்து க்ரூப் வழங்க நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.