Publish Date: Mon, 18 Mar 2019 (19:35 IST)
Updated Date: Mon, 18 Mar 2019 (21:24 IST)
அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் திருப்பூர் தொகுதியில் தற்போதைய வேட்பாளரான சத்யபாமாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக எம்.எஸ்.எம் ஆனந்தன் திருப்பூரில் போட்டியிடுகிறார்.
இதனால் அதிருப்தி அடைந்த திருப்பூர் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா, தினகரன் அணிக்கு தாவவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த திருப்பூர் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா, 'திருப்பூரில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் நான் அதிருப்தியில் இருப்பதாகவும், அணி மாறப்போவதாகவும் பரவுகின்ற வதந்திகள் தவறானது. அதிமுகவில் தற்போது அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக பணியாற்றுவேன்' என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஏற்கனவே அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று திமுகவில் இணைந்துள்ள நிலையில் சத்யபாமாவும் அணி மாறவிருப்பதாக வெளிவந்த செய்தியால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்தது. ஆனால் சத்யபாமாவின் விளக்கத்தை அடுத்தே அதிமுக நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.