Publish Date: Fri, 04 Dec 2020 (11:25 IST)
Updated Date: Fri, 04 Dec 2020 (12:24 IST)
ரஜினியும் மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உருவாகும் என்பது என்னுடைய நிலைப்பாடு என துக்ளக் குருமூர்த்தி கருத்து.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 31 ஆம் தேதி புதிய கட்சி துவங்கும் தேதி அறிவிக்கப்படும் என்றும் ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஊழலற்ற, ஜாதி மதச்சார்ப்ற்ற அரசியல் ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்த நிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும் ரஜினியின் அரசியல் எண்ட்ரி குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது,
25 வருடங்களாக தமிழகத்தில் ஒரு சாபம் உள்ளது. சமுதாயத்திற்கும் அரசியல் போக்கிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்பு முக்கியத்துவம் ஒன்றாக பார்க்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உள்ளேன்.
ரஜினியும் மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உருவாகும் என்பது என்னுடைய நிலைப்பாடு. அதுதான் ரஜினி நிலைப்பாடா என்று எனக்குத் தெரியாது. ரஜினியின் இந்த மாற்றம் வெற்றியை நோக்கித் தான் செல்லும்.
நடிகர் ரஜினிகாந்த் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்று நான் ஒருபோதும் அவரிடம் கூறியது இல்லை. அவர் கருத்து கேட்டால், அதை மட்டும் நான் சொல்வேன். அதனால் தான் அவர் என்னை அழைத்துப் பேசுவார். நான் சொல்வதை நீங்கள் செய்தாக வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்திடம் நான் சொன்னால் அவர் என்னை அழைக்க மாட்டார், அதை செய்யவும் மாட்டார் என்று ரஜினி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
Sugapriya Prakash
Publish Date: Fri, 04 Dec 2020 (11:25 IST)
Updated Date: Fri, 04 Dec 2020 (12:24 IST)