Publish Date: Thu, 16 Aug 2018 (16:15 IST)
Updated Date: Thu, 16 Aug 2018 (16:18 IST)
உடலில் அணிந்திருந்த நகைகளுக்காக மூதாட்டியை அவரின் வீட்டின் அருகில் வசித்து வந்த பெண்கள் கொலை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்படி கங்கானி தெருவில் வசித்து வருபர் அமராவதி. இவரின் வயது 70. கணவர் இறந்து விட்டதால் இவர் மகன், மகளுடன் வாழ்ந்து வந்தர். கடந்த 9ம் தேதி அவரின் மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது அமராவதி கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவரது காது மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும், பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் திருடு போயிருந்தது. எனவே, இதுபற்றி அவரின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
எனவே, எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில், அமராவதியின் வீட்டுக்கு அருகே வசித்து வந்த ஜோதி(31) என்கிற பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் பதிலளித்தார். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது, ஜோதி மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேவிகா(34), பூங்கோதை(35) ஆகிய மூவரும் சேர்ந்து நகைக்காக மூதாட்டியை கழுத்தை நெறித்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14 பவுன் நகைகளையும் போலீசார் மீட்டனர்.