திமுகவுக்கு எதிராக பேசி, தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்த கமல்ஹாசன், இன்று திமுகவின் சார்பில் எம்.பி. ஆகியுள்ள நிலையில், கமல்ஹாசனை விமர்சிக்காதவர்கள் விஜய்யை விமர்சிக்க தகுதி இல்லாதவர்கள் என்று மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பொன். ராதாகிருஷ்ணன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விஜய் கட்சி ஆரம்பிக்கும்போதே, திமுகவையும் பாஜகவையும் தனது கொள்கை எதிரிகளாக அறிவித்தாரே என்ற கேள்விக்கு, "அவருக்கு அப்படி ஒரு உணர்வை சிலர் ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் அவர் அப்படி பேசியிருப்பார். திமுகவுக்கு எதிராக பேசி, தொலைக்காட்சி பெட்டியை உடைத்தவர்தான் கமல்ஹாசன். ஆனால், இன்றைக்கு அதே அணியின் சார்பில் எம்.பி. ஆகிவிட்டார். கமல்ஹாசனை குறை சொல்லி பேசாதவர்கள் விஜய் குறித்து பேசுவதில் அர்த்தம் இல்லை," என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், ஒரு அரசியல் கட்சியை தொடங்க எல்லோருக்கும் உரிமை உண்டு என்றும், விஜய்க்கும் அந்த உரிமை உண்டு என்றும் அவர் கூறினார். "புதிய வரவாக வந்துள்ள விஜய் குறித்து உடனடியாக விமர்சனம் செய்வது சரியல்ல. எல்லாவற்றையும் ஒரு நொடிப் பொழுதில் கற்றுக்கொள்ள முடியாது. அவருக்கு உரிய காலம் தேவைப்படும். அதன் பிறகு விமர்சனம் செய்யலாம்," என்றும் விஜய் கட்சி குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.