Publish Date: Thu, 24 May 2018 (09:06 IST)
Updated Date: Thu, 24 May 2018 (09:13 IST)
தூத்துக்குடி கலவரத்திற்கு காரணமான மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துகுடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று முன் தினம் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 11 பேர் பலியாகிய நிலையில் நேற்றும் இரண்டாவது நாளாக துப்பாக்கி சூடு நடந்தது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் பலியாகிய நிலையில் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவரும் இறந்ததால் கடந்த இரண்டு நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட எஸ்.பி மகேந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் அதிரடியாக வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மாவட்ட எஸ்.பி மகேந்திரன் வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி புதிய கலெக்டராக நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட புது எஸ்.பி.யாக நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
என்னதான் இந்த இடமாற்றுதல் நாடகம் நடந்தாலும், போன உயிருக்கு யார் பதில் சொல்வது, போன உயிர் திரும்ப வருமா? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.