Publish Date: Wed, 13 Jun 2018 (21:30 IST)
Updated Date: Wed, 13 Jun 2018 (21:15 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக ஒரு சரியான தலைமையை தேடி கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ஜெயலலிதாவுக்கே சிம்ம சொப்பனமாக இருந்த திருநாவுக்கரசர் மட்டும் அதிமுகவில் இருந்திருந்தால் அவருக்கு இருக்கும் செல்வாக்கிற்கு முதல்வர் ஆகியிருப்பார் என்று கூறப்பட்டது. இதனை திருநாவுக்கரசரே கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் பாஜகவுக்கு சென்ற திருநாவுக்கரசருக்கு அங்கும் நல்ல மரியாதை. வாஜ்பாய், அத்வானி இருவரின் நம்பிக்கையை பெற்றிருந்த அவர் பின்னர் திடீரென காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். பாஜகவிலேயே அவர் தொடர்ந்திருந்தால் இந்நேரம் அவர் மத்திய அமைச்சர் ஆகியிருப்பார் என்று கூறியது பாஜக வட்டாரம்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக இருக்கும் திருநாவுக்கர்சர் விரைவில் அந்த பதவியில் இருந்து தூக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. குஷ்புவும் இதனை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறினார். இதில் இருந்து எந்த கட்சியாக இருந்தாலும் ஒரே கட்சியில் இருந்தால் மட்டுமே அரசியலில் ஜெயிக்க முடியும் என்றும் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் கட்சி மேல் கட்சி மாறினால் சிக்கல்தான் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்