விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திடீரென அதிமுக பிரமுகர் வைகை செல்வத்தை சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், இதில் அரசியல் பேசவில்லை, இது ஒரு நட்பு ரீதியான சந்திப்பு என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக கூட்டணி உறுதியாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் ஓட்டை விழுந்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, பாட்டாளி மக்கள் கட்சி, திமுக கூட்டணிக்கு வந்தால் நாங்கள் வெளியேறி விடுவோம் என திருமாவளவன் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, 2021 போல் இந்த முறை ஆறு சீட்டுகளுடன் திருப்தி அடைய மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில்தான் திருமாவளவன் - வைகை செல்வம் சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அதே நேரத்தில், அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் விடுதலை சிறுத்தைகள் அந்தக் கூட்டணியில் சேர வாய்ப்பு இல்லை என்றும், ஒருவேளை அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேற்றப்பட்டால் விடுதலை சிறுத்தைகள் உள்ளே வர வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், அடுத்து என்னென்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.