Publish Date: Fri, 16 Jun 2023 (14:06 IST)
Updated Date: Fri, 16 Jun 2023 (14:08 IST)
ராஜ்பவன் ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகளை வேறு 2 அமைச்சர்களுக்கு மாற்ற தமிழக முதலமைச்சர் பரிந்துரை செய்த நிலையில் இந்த பரிந்துரைக்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
செந்தில் பாலாஜிக்கு உடல் நல குறைவு என்பதற்கு பதிலாக அவர் கைது என்ற காரணம் வேண்டும் என ஆளுனர் தரப்பில் இருந்து கூறப்பட்டதாக தெரிகிறது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது:
அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வகித்து வந்த துறைகளை இரு வேறு அமைச்சர்களிடம் ஒப்படைப்பதற்காக ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள். அதனை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
இது அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் அடாவடிப் போக்காகும்.
அமைச்சர்கள் யார் யார் ? அவர்களுக்கு என்னென்ன துறைகள்? என்பனவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வருக்கே உண்டு. இதில் ஆளுநர் தலையிடுவதும் விமர்சிப்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ராஜ்பவன் ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா? என்கிற அய்யம் எழுகிறது.