Publish Date: Mon, 12 Apr 2021 (14:22 IST)
Updated Date: Mon, 12 Apr 2021 (14:24 IST)
படித்த இளைஞர்கள் திருமாவுடன் நிற்பதில்லை என அன்புமணி ராமதாஸ் பேசிய நிலையில் அவரது நிலையை எண்ணி பரிதாபப்படுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் இரட்டை கொலை சம்பவம் குறித்து பேசிய பாமக அன்புமணி ராமதாஸ் ”அரக்கோணம் பிரச்சினையை திருமாவளவன்தான் சாதி பிரச்சினையாக மாற்றுகிறார். படித்த இளைஞர்கள் யாரும் திருமாவளவன் பின்னால் நிற்பதில்லை” என கூறியிருந்தார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பலர் தங்களது படிப்பை குறிப்பிட்டு திருமாவுக்கு ஆதரவாக இருப்பதாக பல ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்தனர்.
இந்நிலையில் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திருமாவளவன் “நாங்கள் திருமாவுடன் நிற்கிறோம் என சமூக வலைதளங்களில் பேராதரவு நல்கிய கல்வியாற் சிறந்த பெருமக்கள் யாவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. மனிதநேய உணர்வையும் சமத்துவ பார்வையையும் வழங்குவதே சிறந்தகல்வி. படித்தவர்கள், படிக்காதவர்கள் என மக்களை பாகுபடுத்தி உயர்வு தாழ்வு காண்பது சனாதனப்புத்தியின் விளைச்சலாகும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர் “அன்புமணி ராமதாஸ் என்னை கேவலப்படுத்துவதாக எண்ணி கல்வி பெற வாய்ப்பில்லாத ஒட்டு மொத்த உழைக்கும் சமுதாயத்தையும் இழிவாக பேசியுள்ளார். அவரது நிலை கண்டு பரிதாபப்படுகிறேன்” என கூறியுள்ளார்.