வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கோரி பாமக நடத்த உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து பாமக எம்.எல்.ஏ சிவக்குமார் பேசியுள்ளார்.
கடந்த சில காலமாக பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த பாமக செயற்குழு கூட்டத்தில் கூட்டணி உள்பட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை அன்புமணி தரப்பினர் மறுத்துள்ளனர்.
மேலும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு கோரி அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அதில் ராமதாஸ் பங்கேற்க முடியாது என கூறிவிட்டார்.
இந்நிலையில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள இடத்தை பார்க்க வந்த பாமக எம்.எல்.ஏ சிவக்குமார் பேசியபோது “ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என டாக்டர் ராமதாஸ் கூறிவிட்டார். டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவிகள் இருந்ததாக கூறப்படுவது குறித்து நாங்களும் விசாரிக்க சொல்லியுள்ளோம்.
அந்த கருவியை 10 நாட்களுக்கு ஒருமுறை சார்ஜ் போட வேண்டுமாம். அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திற்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் வந்தார். அப்படி என்றால் இந்த கருவியை அங்கு வைத்து 10 நாட்களுக்கு ஒருமுறை சார்ஜ் போட்டது யார்? என்ற கேள்வி வருகிறது.
90 சதவீத பாமக தொண்டர்கள் அன்புமணி ராமதாஸுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் டாக்டர் ராமதாஸுடன் சதித்திட்டம் தீட்டும் பலர் உள்ளனர் என்பது தெரிகிறது. ராமதாஸ் எங்கள் வழிகாட்டி. ஆனால் எங்கள் கட்சி தலைவர் அன்புமணி” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K