Publish Date: Sat, 10 Feb 2018 (16:03 IST)
Updated Date: Sat, 10 Feb 2018 (16:07 IST)
வெறும் பத்து கிஃப்டுகளை வாங்கி 100 பேருக்கு கொடுத்த அளப்பறிய சாதனையை படைத்துள்ளது இந்த அரசின் கல்வித்துறை. இந்த மாயாஜால வித்தையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வைத்தே நடத்தியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான தமிழகப் பள்ளிக் கலைத்திருவிழா இன்று காலை தேனியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடந்தது. மாவட்ட பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் தலைமை தாங்கினார்.
விழாவின் முடிவில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் பரிசுகளை வழங்கினார். மாணவ மாணவிகள் பெயர்கள் வாசிக்கப்பட அவர்கள் வரிசையாக துணை முதல்வரிடம் இருந்து பரிசுகளை வாங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டு உடனடியாக அங்கிருந்து நகர வேண்டும்.
அதன்படி புகைப்படம் எடுத்ததும் நகரும் மாணவ, மாணவிகளிடம் இருந்து பரிசுகளை அந்த மேடையிலேயே பறிக்கிறார்கள். அதனை மீண்டும் அடுத்த மாணவ மாணவிகளுக்கு கொடுக்க பயன்படுத்தப்படுகிறார்கள். வெறுமனே பத்து பரிசுகளை வாங்கி அதனை 100 பேருக்கு கொடுத்து சாதனை படைத்துள்ளனர்.
நன்றி: விகடன்
ஸ்கூல்ல உங்களுக்கு பரிசு தருவாங்க, இப்ப வீட்டுக்கு போங்க என மாணவ மாணவிகளை வெறும் கையுமாக அனுப்பி வைத்துள்ளனர். இப்படி ஒரு நிகழ்ச்சியை மாவட்ட கல்வித்துறை ஏற்பாடு செய்யனுமா என கழுவி ஊற்றுகின்றனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கல்வித்துறையின் இந்த மோசமான அனுகுமுறை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் கையில் இருந்து பரிசுகள் பறிக்கப்படுவதை துணை முதல்வர் ஓபிஎஸ் வேடிக்கை பார்த்தது இன்னும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.