Publish Date: Sun, 27 Jan 2019 (08:13 IST)
Updated Date: Sun, 27 Jan 2019 (08:20 IST)
தமிழகத்தில் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக சம்பளம் வாங்கும் ஊழியர்களும், வேலையே இல்லாமலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தவித்து வரும் நிலையில் ரூ.30 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை சம்பளம் பெற்று வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் இருக்க ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க சமீபத்தில் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதனையடுத்து இந்த பணிக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். மாவட்ட தலைநகரில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் இந்த தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பத்தை பெற நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.
நாளை வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் டெட் முடித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், இந்த பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு அவர்களுடைய மொபைல் போனுக்கு தகவல் வந்ததும் பணியில் சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த தற்காலிக ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது