Publish Date: Sat, 11 Nov 2017 (14:17 IST)
Updated Date: Sat, 11 Nov 2017 (14:29 IST)
மிடாஸ் மதுபான ஆலை உள்பட சசிகலாவுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களிலும் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மிடாஸ் மதுபான பெட்டிகளை இனி கொள்முதல் செய்ய போவதில்லை என்று டாஸ்மாக் முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் டாஸ்மாக் மொத்தம் 48 லட்சம் மதுப்பெட்டிகளை கொள்முதல் செய்கின்றது. ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை மிடாஸ் நிறுவனத்திடம் இருந்துதான் கிட்டத்தட்ட மொத்த கொள்முதலும் நடந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தினகரனுக்கு மோதல் ஏற்பட்ட பின்னர் மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யும் அளவை டாஸ்மாக் படிப்படியாக குறைத்தது.
இந்த நிலையில் தற்போது மிடாஸ் நிறுவனத்தில் வருமானவரி சோதனை நடந்ததை அடுத்து இனிமேல் அந்நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டாம் என்று டாஸ்மாக் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதற்கு பதிலாக தி.மு.க., ஆதரவு நிறுவனங்களான, 'எஸ்.என்.ஜே., கல்ஸ் மற்றும் பிற நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்ய டாஸ்மாக் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.